×

மக்களவை தேர்தலில் 400 சீட்டா? இவிஎம் இயந்திரங்களை மோடி நம்பியிருக்கலாம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பா.ஜ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்ற பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்து பேசினார். அப்போது மூன்றாவது முறையாகவும் பா.ஜ கூட்டணி தான் வெற்றி பெறும். 400 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார். அவரது பேச்சு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் அளித்த பதில் வருமாறு: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினோய் விஸ்வம்: பிரதமரின் இந்த உயர்ந்த பேச்சு, அவர் வெற்றியில் நம்பிக்கை இல்லை, தேர்தலுக்கு பயப்படுகிறார் என்பதை காட்டுகிறது. அவரது அரசாங்கம் செயலற்ற மற்றும் துரோக அரசு, வாக்குறுதிகளை மறந்த அரசாங்கம், நாட்டிற்கும் அதன் மதச்சார்பற்ற தன்மைக்கும் மட்டுமே தீங்கு விளைவித்த அரசாங்கம் என்பதால் மக்கள் அவர் மீது தீர்ப்பு வழங்குவார்கள் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அரசின் வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் என்ன ஆனது? பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு இந்த அரசு என்ன செய்தது?. மோடி வாக்குறுதியளித்த இரண்டு கோடி வேலைகள் எங்கே?. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இனக்கலவரம் நடந்து வரும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு பிரதமர் இன்னும் ஏன் செல்லவில்லை . பிரதமர் மணிப்பூருக்குச் சென்று மணிப்பூர் பெண்களிடம் மன்னிப்பு கேட்க ஏன் தயாராக இல்லை என்று நாங்கள் கேட்கிறோம்.

இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜான் பிரிட்டாஸ்: இந்த நாட்டில் அனைவருக்கும் கனவு காண உரிமை உள்ளது. பிரதமருக்கும் 400 அல்லது 500 இடங்கள் வேண்டும் என்று கனவு காண உரிமை உள்ளது. ஆனால் உண்மை வேறுவிதமானது. நாட்டு மக்கள் தங்கள் நடவடிக்கையை தாங்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வேறு தலைவரை பற்றி கனவு உள்ளது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்; நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ 370ஐ தொடவில்லை என்றால் மோடி பதவியேற்க மாட்டாரா? அவர் முதலில் பதில் சொல்ல வேண்டும். பாஜவின் இந்த மாதிரியான கனவு எப்போதுமே தோற்றுப்போனது. இது ‘இந்தியா ஒளிர்கிறது’ பாகம் 2 ஆகப் போகிறது. பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காரணமாக 400 இடங்கள் கிடைக்கும்என்று மோடி நம்பி இருக்கலாம். அவர் பதவியின் கண்ணியத்தையாவது காப்பாற்ற வேண்டும். 2024ல் அவரது திமிர் உடைந்துவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

The post மக்களவை தேர்தலில் 400 சீட்டா? இவிஎம் இயந்திரங்களை மோடி நம்பியிருக்கலாம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Modi ,New Delhi ,BJP ,President ,Parliament ,Dinakaran ,
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!